போலீஸிடமே விசிட்டிங் கார்டை நீட்டி மாட்டிக் கொண்ட போலி ஐஏஎஸ் அதிகாரி!!
போலீஸிடமே விசிட்டிங் கார்டை நீட்டி மாட்டிக் கொண்ட போலி ஐஏஎஸ் அதிகாரி!!
சென்னை அருகே ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் போலீஸிடம் ஐ.டி. கார்டை காட்டி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (27) என்பவர் மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது அந்த வழியாக வந்த பைக் மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பைக்கில் வந்த 4 பேர் தன்னிடம் தகராறு செய்ததாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்த சுபாஷ் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என கூறியுள்ளார்.
இது தொடர்பாக 4 பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை செய்து வழக்குப் பதிந்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் புகார் தெரிவித்த சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த விசிட்டிங் கார்டில் ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் என்று போடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுபாஷ் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் சுபாஷ் மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரித்து வருகின்றனர்.
newstm.in