சமூகவலைதளங்களில் இருந்து முற்றிலும் விலகுவதாக பாலிவுட் நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காரணத்தை அறியலாம்.

பாலிவுட் சினிமாவின் வசூல் நாயகனும், பல்வேறு புகழ்பெற்ற டிரெண்டுகளுக்கு சொந்தமான ஆமிர் கான் நேற்று தனது 56 வயது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை கூறினர். இதனால் அவருக்கு பிறந்தநாள் கூறும் வாழ்த்துகள் அடங்கிய ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்ட நடிகர் ஆமிர் கான், அனைத்து சமூகவலைதளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் இதயத்தில் இருந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கூறிய வாழ்த்துச் செய்திகளால் நெஞ்சம் நிறைந்துள்ளது. என் சமூகவலைதளங்களில் இதுவே என்னுடைய கடைசி பதிவாக இருக்கும். சமூகவலைதளங்களில் நான் ஆக்டிவாக இல்லையென்றாலும், விலகுவதில் உறுதியாக இருக்கிறேன். தற்போது என்னுடைய ஆமிர் கான் புரொடக்‌ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வ சேனலாக மாறியுள்ளது. இதுதொடர்பான உடனுக்குடன் தகவல்களை அதில் தெரிந்துகொள்ளலாம் என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ஆமிர் கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை தொடங்கினார். தற்போது வரை அவருக்கு 3 மில்லியன் (30 லட்சம்) ஃபோலோயர்ஸுகள் உள்ளனர். தொடர்ந்து அவர் ஆக்டிவாக இருந்திருந்தால் மேலும் ஃபாலோயர்ஸுகள் கூடியிருப்பார்கள் என்பது உண்மை. ஆனால் அதற்குள் சமூகவலைதளங்களில் இருந்து விலகும் முடிவை அறிவித்து, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.

Tags: