பொய்த் தகவல்கள் பரப்பியதாக 35 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை !!
பொய்த் தகவல்கள் பரப்பியதாக 35 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை !!
இந்தியாவுக்கு எதிரான பொய்த் தகவல்கள் மற்றும் தவறான செய்திகளைப் பரப்பியதாக 35 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யூடியூப் சேனல்களில் எந்தவொரு தகவல்களையும் உறுதிப்படுத்தாமல் செய்திகள் வெளியிடுகின்றன. இதனால் பல நேரங்களில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதாக புகார்கள் எழுந்துகொண்டே உள்ளன. இதற்கு மேலாக வெறுப்புஉள்ள அண்டை நாடுகளின் அடையாளங்களுடன் யூடியூப் சேனங்கள் தொடங்கி அவதூறு பரப்பும் கும்பலும் உள்ளது.
அவ்வாறு இந்தியாவுக்கு எதிரான பொய்த் தகவல்களை பரப்பியதாக பாகிஸ்தானைச் சோ்ந்த 35 யூடியூப் சேனல்கள் மூடக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைச் செயலா் அபூா்வ சந்திரா செய்தியாளா்களிடம் நேற்று கூறியதாவது, இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் 35 யூடியூப் சேனல்கள், தலா 2 இணையதளங்கள், ட்விட்டா் கணக்குகள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆகியவற்றுக்குத் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த யூடியூப் சேனல்கள் 1.20 கோடி சந்தாதாரா்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பாா்வைகளையும் கொண்டவையாகும். இந்த சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களை இந்திய உளவு அமைப்புகள் உன்னிப்பாக கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அளித்த பரிந்துரையின்பேரில் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் யூ டியூப் சேனல்கள் உள்ளிட்டவற்றைத் தடை செய்துள்ளது. இவற்றில் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளா்கள் மற்றும் தொகுப்பாளா்களால் நடத்தப்படுகின்றன.
இந்த சேனல்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் எடிட்டிங் முறையும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆகையால், அவற்றை ஒரு சில நபா்கள் இயக்கி வருவதாகத் தெரிகிறது.
இந்திய ராணுவத்துக்கு எதிரான கருத்துகள், ஜம்மு -காஷ்மீா் விவகாரம், இந்திய வெளியுறவுக் கொள்கைகள், பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள், ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் மறைவு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய விவகாரங்களில் இந்த யூடியூப் சேனல்கள் நாட்டுக்கு எதிரான தவறான ‘தகவல் போரை’ தொடுக்கும் பாணியில் செயல்பட்டுள்ளன.
ஆகையால், விஷமத்தனமான பிரசாரத்தையும், இந்தியாவுக்கு எதிரான பொய்த் தகவல்களையும் முறியடிக்க வேண்டும் என்ற இந்திய உளவு அமைப்புகளின் பரிந்துரையின்படி பாகிஸ்தானில் இருந்து செயல்படும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளுக்குத் தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்பும் யூடியூப் சேனல்களை கண்காணிக்கும் பணியில் உளவு அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால், மேலும் பல யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்பும் சமூக ஊடக கணக்குகளைக் கண்காணித்து அடையாளப்படுத்த வேண்டியது யூடியூப், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் கடமையாகும், எனவும் அவர் கூறினார்.
newstm.in