முதல்வரே, காருக்கு பதில் இவைகளை கொடுங்க.. இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை..!
முதல்வரே, காருக்கு பதில் இவைகளை கொடுங்க.. இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை..!
“ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காருக்கு பதில் உழவுத்தொழில் தொடர்பான கருவிகளை வழங்கவேண்டும்” என்று, தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு கார் பரிசளித்தபோது, இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதல்வர் கார் வழங்குவதாக அறிகிறேன்.
வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பங்குபெறும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம். இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.
ஏற்கெனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்..? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.
பரிசாக வழங்கும் காரை வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் தயவு கூர்ந்து இக்கோரிக்கை குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.