பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி !!
பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி !!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் கடுமையாக போராடி வருகிறது.
உத்தரபிரதேச மாநில தேர்தல் பொருப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. மக்களின் ஆதரவை திரட்டுவதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் பிரதிக்யா யாத்திரை நடத்துகிறது. இந்த யாத்திரையின்போது, பாஜக ஆட்சி மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் நடைபெற்ற பிரதிக்யா யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.
இந்த யாத்திரையில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் தலித்துகள், நெசவாளர்கள், ஓபிசி மக்கள், ஏழைகள், சிறுபான்மையினர் மற்றும் பிராமணர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துகிறார். இந்த அரசு நாள்தோறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 4.5 ஆண்டுகளாக மாநில அரசு எதையும் செய்யவில்லை. யோகி ஜி முதலமைச்சரான பிறகு கோரக்பூரை மறந்துவிட்டார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஆறுகளில் சடலங்கள் மிதந்தன. சுகாதார சேவைகள் மோசமான நிலையில் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.32,000 கோடியைத் தவிர, விவசாயக் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். எங்கள் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும். மீன் வளர்ப்புக்கு விவசாய அந்தஸ்து வழங்குவோம். நெல், கோதுமை ரூ.2,500க்கும், கரும்பு ரூ.400க்கும் எடுக்கப்படும். எங்கள் அரசு இளைஞர்களுக்கு 20 லட்சம் அரசு வேலைகளையும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும் அளிக்கும். பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம், எந்த நோய் வந்தாலும், 10 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும், என்று அவர் கூறினார்.
newstm.in