அரசுப்பேருந்து மீது மோதி புரட்டி போட்ட சரக்கு லாரி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !!

அரசுப்பேருந்து மீது மோதி புரட்டி போட்ட சரக்கு லாரி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !!

Update: 2021-12-27 17:05 GMT

மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி இன்று 20 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. சிறுமுகை சாலையில் பிரதான வளைவில் நேராக செல்லும் அரசு பேருந்து, நிதானமான வேகத்துடன் சென்றுக்கொண்டிருந்தது. 

அப்போது கிளை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு திரும்பிய தூத்துக்குடியில் இருந்து கரி கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று, அரசு பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் உள்பட 8 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். 

லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து அப்படியே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரம் இருந்த கடைகள் மீது சாய்ந்தது.  அந்த நேரத்தில் சாலையில் யாரேனும் நடந்து சென்றிந்தாலோ அல்லது கடைகளின் முன்புறம் நின்றிந்தாலோ உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக யாரும் அப்படி செல்லவில்லை.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கபட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Similar News