பிபின் ராவத் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு!!

பிபின் ராவத் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு!!

Update: 2021-12-09 06:00 GMT

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டில்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் ராணுவ அதிகாரிகள் வந்து பயிற்சி அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று அங்கு நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படை தளத்திலிருந்து, ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் இருந்த நிலையில், ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது, பிற்பகல் 12:40 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஹெலிகாப்டர் எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், ‘குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு டெல்லியில் நாளை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.

newstm.in

Similar News