பெற்றோருக்கு நல்ல செய்தி.. ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்க வாய்ப்பு !!
பெற்றோருக்கு நல்ல செய்தி.. ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்க வாய்ப்பு !!
கொரோனா 2ஆவது அலையில் இருந்து மீண்டும் வரும் இந்தியா 3ஆவது அலை அச்சத்தில் இருக்கிறது. இதனால் தற்போது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதேபோல் ஒருசில இடங்களில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 12 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு பயன்படுத்தும் வகையில் குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடிலா நிறுவனம் தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. 3ஆவது கட்டத்தில் 28 ஆயிரம் தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு உள்ளது. 12 வயது மேற்பட்டவர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஜைகோவ்-டி என்ற தடுப்பூசிக்கு அந்த நிறுவனம் ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது. இந்தநிலையில் சைடஸ் கேடிலா நிறுவனம் தனத 3ஆவது கட்ட பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படும் இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், அவசர கால பயன்பாட்டுக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜைகோவ்-டி தடுப்பூசி செலுத்தமுடியும். மேலும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வர மருந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in