நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி.. பெட்ரோல்- டீசல் விலை குறைகிறது !!!
நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி.. பெட்ரோல்- டீசல் விலை குறைகிறது !!!
இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளதாக சாமானிய மக்கள் அவதியடைந்துள்ளனர்.
அதேபோல், டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு வாகன கட்டணம் உயர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய மக்களுக்கு ஒரு நல்லச்செய்தி கிடைத்துள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் விலை குறையப்போகிறது என்பது தான் அந்த செய்தி.
எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க Opec (oil and petroleum exporting countries) என அழைக்கப்படும் எண்ணெய் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, தேவையை சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க அவை முடிவு செய்துள்ளன. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே இருந்த வேறுபாடு களையப்பட்டுள்ளதும் இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒப்பெக் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 10 மில்லியன் பேரல்களாக குறைத்தன. இதன் காரணமாக தேவை அதிகரித்து விலையும் உயர்ந்தது. தற்போது, புதிய ஒப்பந்தத்தின்படி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்க ஒப்பெக் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படுவதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
newstm.in