அரசு வேலை வேண்டும்.. மோசடி மன்னனால் சென்னைக்கு வந்து நிர்கதியான பெண்

அரசு வேலை வேண்டும்.. மோசடி மன்னனால் சென்னைக்கு வந்து நிர்கதியான பெண்

Update: 2022-01-09 07:13 GMT

பெண்ணிடம் பணம் மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ள நபரை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி (32). எம்.எஸ்.டபள்யூ பட்டதாரியான இவர் சென்னையில் வேலை தேடி சென்றுள்ளார். அப்போது தோழி ஒருவரின் மூலமாக சென்னையை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவர் அறிமுகமானார். ராஜேஷ், அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 4.50 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

வேலை இப்போது வரும் அப்போது வரும் என்று ஏமாற்றி வந்த ராஜேஷ் மேலும், இதேபோல் மேலும் 5 பேரை சேர்த்து விட்டால் உனக்கு வேலையும் கிடைக்கும் காசும் கிடைக்கும் என்றும்  ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் பலரிடம் அரசு வேலை பெற்று தருவதாக கூறி பணத்தை லட்ச கணக்கில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அரசு வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் தேன்மொழியை தொல்லை செய்து உள்ளனர். 

எப்போது கேட்டாலும் ஏதாவது காரணம் ஒன்றை கூறி அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவுக்கு சென்ற தேன்மொழியை மீட்டு அவரது உறவினர்கள் மோசடி மன்னன் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தேன்மொழி அளித்த புகாரை சம்மந்தபட்ட கந்திலி காவல் நிலையத்திற்கு அனுப்பி உள்ளனர்.

அப்போது விசாரணைக்காக ராஜேசை அழைத்த சீனிவாசன் என்ற போலீஸ்காரர் ராஜேஷிடம் நட்பு பாராட்டினார். இதனால் தேன்மொழி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏலகிரி மலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று கையூட்டு பெற்று கொண்டு விசாரணையை கிடப்பில் போட்டு உள்ளார். இதனால் தைரியம் அடைந்த ராஜேஷ் பணம் கொடுத்து ஏமாந்த பெண்ணை செல்போனில் தாறுமாறாக மிரட்டி உள்ளார்.

இதே போன்று வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்திலும் ராஜேஷிடம் பல பேர் பல லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். இந்த மோசடி ஆசாமியை காவல் துறையினர் பிடித்து உரிய முறையில் விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணம் பெற்று தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

newstm.in

Similar News