மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி..?
மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி..?
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று (3ம் தேதி) நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மின் வாரிய மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.
அதன் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: “இலவச மின்சார இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியிலேயே மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு, அவர்கள் ஆட்சி முடிவதற்குள் 2.66 லட்சம் விவசாய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தி முடிக்கப்பட்டு விட்டது.
ஓ.பன்னீர்செல்வம் இதை தெரிந்து கூறுகிறாரோ அல்லது தெரிந்தும் மறைத்தாரா என தெரியவில்லை. எனவே, திமுக ஆட்சியில்தான் இப்பணி தொடங்கப்பட்டதாக கூறுவது தவறானது.
அதேபோல், மின்சார வாரியத்தில் இதர சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2017-ல் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டே மின்வாரியத்தில் இதர சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்பட்டது கடந்த ஆட்சியில்தான்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படுவதாக தவறான தகவலை கூறியுள்ளார். பொதுவாக, மின்கட்டணத்தை பொறுத்தவரை எவ்வித ஜி.எஸ்.டி. கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இதர சேவைகளுக்குதான் ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, எவ்வித புதிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.