இங்கேயும் வந்துட்டா..?: மளிகைக் கடையில் கஞ்சா.. வட மாநில உரிமையாளர் கைது..!
இங்கேயும் வந்துட்டா..?: மளிகைக் கடையில் கஞ்சா.. வட மாநில உரிமையாளர் கைது..!
பரமத்தி வேலூர் அருகே மளிகை கடையில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபரை பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் பெட்டனா பகுதியை சேர்ந்தவர் கமல். இவருடைய மகன் அக்பர் உசேன் (34). இவர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் தங்கி மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
அவருடைய கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று இருக்கூரில் உள்ள அக்பர் உசேனின் மளிகைக் கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது, விற்பனை செய்வதற்காக மளிகை கடையில் மறைத்து வைத்திருந்த ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் மளிகைக் கடையில் கஞ்சா விற்பனை செய்த அக்பர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.