பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த இந்து மகாசபா தலைவர் பணமோசடி வழக்கில் கைது!!

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த இந்து மகாசபா தலைவர் பணமோசடி வழக்கில் கைது...!

Update: 2020-03-02 17:50 GMT

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த  அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகண்டன், பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி புகார் அளித்தார். அதில் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில்  5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து தன்னை சமூக வளைதளங்களில் ஶ்ரீகண்டன் இழிவு படுத்தி வருவதாகவும் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களைப் பரப்பி வருவதாக இணையதளம் வாயிலாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி நிரஞ்சனி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருந்த ஸ்ரீ கண்டனை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் பாலியல் புகார் வழக்குகளில் ஸ்ரீகண்டன் முன்ஜாமீன் பெற்றார். 

இதனிடையே, விமல் சந்த் என்பவர் ஸ்ரீகண்டன், தன்னை பண மோசடி செய்திருப்பதாக கீழ்ப்பாக்கம் (G3) காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கீழ்ப்பாக்கம் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனை நேற்றிரவு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிரஞ்சனி அளித்த பாலியல் புகார் வழக்கில் கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டனின் நண்பர்களான ஜெயபாலாஜி, நடராஜன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் ஒன்றிய துணைத்தலைவராக இருந்து வரும் புவியரசு ஆகியோரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News