இல்லம் தேடிக் கல்வி கலைப்பயணக் குழு நீக்கம்..!!
இல்லம் தேடிக் கல்வி கலைப்பயணக் குழு நீக்கம்..!!
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 8 குழுக்களில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில், தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சர்மிளா சங்கர் என்பவரின் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி குழு டி-சர்ட் உடன் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால், இல்லம் தேடி கல்வி பிரச்சாரக் குழுவிலிருந்து சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பயணக் குழுவை நீக்கம் செய்து திருச்சி ஒருங்கிணைந்த பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.