கொடுமை! பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளத் தடை!!

கொடுமை! பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளத் தடை!!

Update: 2021-12-28 06:15 GMT

குடும்ப ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தொலைதூரத்திற்கு பயணம் செய்ய தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். 20 ஆண்டுகளுக்கு பின் அங்கு மீண்டும் ஆட்சியை நிறுவியிருப்பதுடன் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை தாலிபான் தலைமையிலான ஆப்கன் அரசை எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணம் அங்கு மீண்டும் மனித உரிமை மீறலும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் அதிகரித்துள்ளன.

இதனிடையே ஆப்கன் அரசின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளை தடுப்பதற்கான அமைச்சகம் பெண்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 45 மைல்கள் (72 கிமீ) தொலைவுக்கு மேல் பயணிக்கும் பெண்கள் கட்டாயம் ஒரு ஆண் உறவினரின் துணையுடன் தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ஆண் துணை இல்லாத பெண்களை வாகனங்களில் ஏற்றக் கூடாது என அனைத்து வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்படி பயணிக்கும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் ( உடலை முழுமையாக மறைக்கும் உடை) அணிந்திருக்க வேண்டும். வாகனங்களில் பொதுமக்கள் இசையை கேட்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தொலைக்காட்சிகளில், டிவி தொடர்களில் பெண் நடிகர்கள் நடிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

newstm.in

Similar News