“முஸ்லிம் என்பதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்” : பெண் எம்.பி. பரபரப்பு புகார்!!

“முஸ்லிம் என்பதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்” : பெண் எம்.பி. பரபரப்பு புகார்!!

Update: 2022-01-25 08:48 GMT

இஸ்லாமியர் என்பதால் தாம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எம்.பி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முழு முடக்க காலத்தில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற விவகாரம் பூதாகரமாகியிருக்கிறது.

இதனால் போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை இந்த வாரத்தில் வெளியாகும் எனவும், விசாரணை முடிவில் போரிஸ் ஜான்சன் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமானால் அவர் பிரதமர் பதவியை இழக்கலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் எம்.பி ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு போரிஸ் ஜான்சனுக்கு மேலும் ஒரு பிரச்னையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்தவர் நுஸ்ரத் கானி, இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக நுஸ்ரத் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நுஸ்ரத் இது தொடர்பாக போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து நுஸ்ரத் இஸ்லாமியர் என்பதற்காக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க குழு ஒன்றை போரிஸ் ஜான்சன் நியமித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே அரசின் தலைமை கொறடாவான மார்க் ஸ்பென்சர், எம்.பி நுஸ்ரத்தின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி எந்தவிதமான இனவெறி அல்லது பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாது என அவர் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அவை அவதூறானவை என்று நான் கருதுகிறேன் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

Similar News