மீண்டும் ஐபிஎல் போட்டி.. விரைவில் வெளியாகிறது அடுத்தக்கட்ட அறிவிப்பு- கங்குலி !!
மீண்டும் ஐபிஎல் போட்டி.. விரைவில் வெளியாகிறது அடுத்தக்கட்ட அறிவிப்பு- கங்குலி !!
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்த ஐ.பி.எல். 14ஆவது சீசன் கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. குறிப்பாக விளையாடும் வீரர்களுக்கு கொரோனா பரவியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் விருத்திமான் சஹா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது பிசிசிஐ-க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்ல வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது:- எனக்கு தெரிந்தவரை, வீரர்கள் யாரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறவில்லை. ஐ.பி.எல். தொடரிலும் கொரோனா எப்படி வந்தது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பது மிகவும் கடினம் என்றார்.
கடந்த ஆண்டை போலவே இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முதலில் ஆலோசித்தோம். ஆனால் போட்டி அட்டவணையை திட்டமிட்ட சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகமிக குறைவாக இருந்ததால் இந்தியாவிலேயே போட்டியை நடத்துவது என்று முடிவுக்கு வந்தோம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த மும்பையில் கூட ஐ.பி.எல். தொடக்ககட்ட லீக் ஆட்டங்களை எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
தற்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிர்ஷ்டவசமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் நலமுடன் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் குணப்படுத்தப்பட்டு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா பரவிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை கூறுவது நியாயமற்றது. உலகம் முழுவதும் பல போட்டிகளில் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் இடையே கொரோனா பரவியதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படும்.
இந்தியாவில் 6 நகரங்களில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் விமானம் மூலம் தான் மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்த பயணத்தின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம்
நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம் என கங்குலி கூறினார்.
newstm.in