சொத்துக்காக இரும்பு ராடால் தந்தை அடித்துக்கொலை.. மகன் வெறிச்செயல் !
சொத்துக்காக இரும்பு ராடால் தந்தை அடித்துக்கொலை.. மகன் வெறிச்செயல் !
நிலத்தகராறில் தந்தையை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு மகன் தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மாம்பட்டி கிராமத்தில் கோபால் (70) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு முருகேசன் (50) என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். விவசாயியான கோபாலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தனது பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்
ஆனால், சொத்தை பிரிப்பதில் தகராறு தொடங்கியது. இவருடைய 3 மகள்களில் ஒருவர் தந்தை பெயரில் உள்ள நிலத்தில் தனக்கும் ஒரு பகுதியை வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இவ்வாறு நிலத்தில் பங்கு வழங்க கோபாலின் மகன் முருகேசன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தந்தை- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஏற்கனவே காவல்நிலையம் வரை சென்றனர். ஆனால் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தந்தை - மகன் இடையே நிலம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த முருகேசன் அருகே கிடந்த இரும்புக் கம்பியால் தந்தை கோபாலின் தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்து கீழே விழுந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் முருகேசன் அங்கிருந்து ஓடி விட்டார்.
இது பற்றிய தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கொலை வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகேசனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in