இந்தியா வாழ்க என்று கூறினால் தவறா..?: கேட்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு..!

இந்தியா வாழ்க என்று கூறினால் தவறா..?: கேட்கிறார் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு..!

Update: 2022-01-06 11:27 GMT

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்றைய நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஜன. 6 மற்றும் ஜன. 7 ஆகிய 2 நாட்கள் மட்டும் பேரவைக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

6ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 7ம் தேதி விவாதம் மற்றும் முதல்வரின் பதில் உரையுடன் பேரவைக் கூட்டம் நிறைவு பெறும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு. கேள்வி நேரம் மற்றும் முதல்வர் பதில் உரை ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில தலைவர்கள் மட்டுமே பேசுகின்றனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக 2 நாட்கள் மட்டுமே கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 உறுப்பினர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால், யாரும் பயப்படத் தேவையில்லை” என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

ஆளுநர், உரையைத் தாண்டி ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளாரே? என்று பேரவைத் தலைவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதில் ஒரு தவறும் இல்லையே. இந்தியா வாழ்க என்று கூறினால் தவறா..? உரையைத் தண்டி நானும் நன்றி, வணக்கம் என்று கூறினேன். அதிலும் தவறு இல்லையே. ஜெய்ஹிந்த் என்று யாரும் கூறக் கூடாது என்று சட்டம் கிடையாது” என்றார்.

Similar News