காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Update: 2022-01-03 17:13 GMT

குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிடக்கோரி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுசென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வண்ணவிளக்குகளை தவறாக பயன்படுத்தியதாக 4,456 வழக்குகளும், கருப்பு ஸ்டிக்கர் தொடர்பாக 4,697 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான நம்பர் பிளேட் பயன்படுத்துவது தொடர்பாக சுமார் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்போது எந்த துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்கள் தனிப்பட்ட வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும் தேசிய மற்றும் மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாததை சுட்டிக்காட்டிய நீதிபதி இத்தகைய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினர். குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்றும் தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை நாளைய மறுநாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

newstm.in

Similar News