ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சலுகை வழங்குவதை ஏற்க முடியாது.. எம்பி கார்த்தி சிதம்பரம்..!

ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சலுகை வழங்குவதை ஏற்க முடியாது.. எம்பி கார்த்தி சிதம்பரம்..!

Update: 2021-12-29 05:05 GMT

“25 முதல் 30 ஆண்டு வரை ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற கொள்கை முடிவு எடுத்து, அதன் மூலம் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் அதை நாங்கள் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டோம்” என, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கை, வதந்திகள் என எதையும் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டாம். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழியாகும்.


சட்டரீதியாக ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 25 முதல் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தால் அவர்களை விடுவிக்கலாம் என சட்டம் இருந்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு மட்டும் சலுகை வழங்குவதை ஏற்க முடியாது. தமிழக சிறைச்சாலைகளில் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனையை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்யலாம் என்ற கொள்கை முடிவு எடுத்து, அதன் மூலம் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தால் அதை நாங்கள் தடுக்கவோ, மறுக்கவோ மாட்டோம்.

நீதிமன்றத்தால் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டவர்களை எல்லாம் ஹீரோவாக்க வேண்டாம். ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி மட்டும் இறக்கவில்லை; அவரோடு சேர்ந்து 16-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அவர்களைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது” என்றார்.

Similar News