“பேய்கள் இருப்பது உண்மை, நான் விரட்டியிருக்கிறேன்” : பகீர் கிளப்பும் ஐஐடி இயக்குநர்!!

“பேய்கள் இருப்பது உண்மை, நான் விரட்டியிருக்கிறேன்” : பகீர் கிளப்பும் ஐஐடி இயக்குநர்!!

Update: 2022-01-17 11:30 GMT

பேய்கள், கெட்ட ஆவிகள் இருப்பது உண்மை தான் என்றும், அவற்றை தாம் மந்திரம் சொல்லி விரட்டி இருப்பதாக ஐஐடி மண்டியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மிதர் பெஹரா (Laxmidhar Behera) தெரிவித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.

பேய்கள் இருக்கின்றன, இறந்தவர்கள் ஆவியாக உலவுகின்றனர் என்ற நம்பிக்கை ஒரு தரப்பினருக்கு இருந்தாலும், படித்தவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள் அதை நம்புவதில்லை. ஆனால் ஐஐடி மண்டியின் இயக்குநர் லக்ஷ்மிதர் பெஹரா பேய்கள் இருக்கிறது என்று சொல்லியிருப்பது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

அவர் பேசிய 5 நிமிட வீடியோ கிளிப் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேய்கள் இருப்பது உண்மை தான் என்றும், அவற்றை தன்னுடைய நண்பர் வீட்டில் மந்திரங்கள் சொல்லி தாம் விரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Learn Gita Live Gita என்ற யூடியூப் சேனலில் அவர் இவ்வாறு பேசிய வீடியோ அப்லோட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து வீடியோ நீக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த 5 நிமிட வீடியோவில், 1993ஆம் ஆண்டு சென்னையில் பேய்களால் பாதிக்கப்பட்டிருந்த தனது நண்பரை காப்பாற்ற சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு சென்று பகவத் கீதாவில் உள்ளவற்றை படித்ததாகவும், ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று மந்திரங்களையும் கூறியதாகவும் லக்ஷ்மிதர் பெஹரா தெரிவித்துள்ளார்.

இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் குடியிருப்பில் இருந்த, பேயால் பாதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்த நண்பரின் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு நண்பரின் தாய் மற்றும் தந்தைக்கு பேய் பிடித்து அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக வீடியோவில் கூறியுள்ளார்.

மந்திரத்தை சொல்ல சொல்ல நடக்கவே கஷ்டப்படும் தனது நண்பரின் தந்தை ஆக்ரோஷமாக ஆடியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் வீட்டின் மேல் புறம் வரை பறந்து சென்றதாகவும், அவர் பேய்களால் கடுமையாக பீடிக்கப்பட்டிருந்தார் என்று வீடியோவில் பேசியுள்ளார்.

அவர்களை சரிசெய்ய 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து மந்திரங்களை சொல்ல வேண்டிய இருந்ததாக பெஹரா தெரிவித்துள்ளார். அதனால் பேய்கள் இருப்பது உறுதி என்றும், தாம் செய்ததை தான் விவரித்ததாக வீடியோவில் கூறியுள்ளார்.

 மேலும், நவீன அறிவியலால் பல நிகழ்வுகளை விளக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. ஒரு படித்த, ஐஐடி இயக்குநராக இருக்கும் நபர் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐஐடி கான்பூரில் பணியாற்றிய பெஹரா கடந்த 13ஆம் தேதி ஐஐடி மண்டியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராகவும், ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவராகவும் உள்ளார்.

மேலும் டெல்லி ஐஐடியில் முனைவர் பட்டமும், தகவல் தொழில்நுட்பத்திற்கான ஜெர்மன் தேசிய மையத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News