இனி தான் மீண்டும் ஆரம்பம்.. அதிக விழிப்புடன் இருக்க 'எய்ம்ஸ்' எச்சரிக்கை !!
இனி தான் மீண்டும் ஆரம்பம்.. அதிக விழிப்புடன் இருக்க 'எய்ம்ஸ்' எச்சரிக்கை !!
பண்டிகை காலங்களில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் மூன்றாம் அலை வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியத்துடன் இருப்பதை காணமுடிகிறது.
மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, கொரோனா 3ஆவது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்பு அதிகரிக்கலாம் என மத்திய அரசின் குழுவும் அறிவுறுத்தியது.
சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வந்தாலும் பண்டிகை காலம் நெருங்க உள்ளதால் மக்கள் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா, பண்டிகை காலங்களான அடுத்து வரும் 6 முதல் 8 வார காலத்திற்கு அனைவரும் உச்சகட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த குறிப்பிட்ட கால கட்டத்தை கடந்துவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் பெருமளவு குறைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, கூட்டம் என்றால் கொரோனாவுக்கு பிடிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போதும் அதனையே குறிப்பிட்டு மக்கள் பண்டிகை காலங்களில் முடிந்தஅளவுக்கு கூட்டம் கூடாமல் இருந்தால் கொரோனாவை விரட்ட முடியும்.
newstm.in