கல்லூரிக்குள் வலம் வந்த சிறுத்தை புலி.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!
கல்லூரிக்குள் வலம் வந்த சிறுத்தை புலி.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!
கோவை மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் வனப்பகுதிக்கு அருகில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி ஒன்று சுற்றித் திரிகிறது. இதை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அந்த சிறுத்தை புலி கூண்டுக்குள் சிக்காமல் வனத்துறையினருக்கு தண்ணி காட்டி வருகிறது.
இந்நிலையில் அந்த சிறுத்தை புலி, அப்பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து அங்கு கட்டி போடப்பட்டிருந்த 2 நாய்களை கொன்று சென்றுள்ளது. மேலும், தரையில் இருந்த ரத்தக் கரையில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன் அந்த சிறுத்தை புலி, கல்லூரி வளாகத்துக்குள் செல்வதும், அங்கிருந்த படிக்கட்டுகளில் லாவகமாக இறங்குவதும், அங்கு காயப்போட்டிருந்த துணியை முகர்ந்து பார்ப்பதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, சிறுத்தை புலி கூண்டில் சிக்கும் வரை பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளனர்.