குறையாத கொரோனா! ஊரடங்கை ஜுன் 14வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு!!
குறையாத கொரோனா! ஊரடங்கை ஜுன் 14வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு!!
கர்நாடக மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஜூன் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலமும் தற்போது ஊரடங்கை ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடகாவில் தற்போது ஜூன் 7 வரை உள்ள ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தாக்கத்தின் வேகம் குறையும் நிலையில் ஊரடங்கை ஜூன் 21 வரை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு 14ஆம் தேதி வரை நீட்டித்தப்போதும் கொரோனா முழு ஊரடங்கில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து உரிய ஆவணங்களோடு வந்தால் கர்நாடகாவிற்குள் வாகனங்களுக்கு அனுமதியுள்ளது. ஆனால் இ-பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ காரணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கர்நாடகா வர முடியும். அதே நேரம் ரயில்கள், விமானத்தில் கர்நாடகாவிற்குள் செல்ல தடையில்லை. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காலை 6-10 மணிக்குள் கடைகளுக்கு செல்ல வாகனங்களை பயன்படுத்த அனுமதி உள்ளது.
newstm.in