நுரையீரல் செல்களை பாதிக்கும்.. ஒமைக்ரான் குறித்து மருத்துவ நிபுணர் எச்சரிக்கை..!
நுரையீரல் செல்களை பாதிக்கும்.. ஒமைக்ரான் குறித்து மருத்துவ நிபுணர் எச்சரிக்கை..!
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்ப விடாமல் தாக்கி வருகிறது.
தற்போது, தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த ஒமைக்ரான், டெல்டா போன்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு லேசான பாதிப்பு கொண்டது அல்ல என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ரவீந்திர குப்தா. இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி ஆவார். ஒமைக்ரான் குறித்து அவர் கூறுகையில், “ஒமைக்ரான் வைரஸ் கொஞ்சம் வலிமை குறைந்தது போன்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் சார்ஸ் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒருபோதும் மென்மையானதாக மாறப்போவதில்லை.
வைரஸ் என்பது உருமாற்றம் அடையக் கூடியது. அது உருமாற்றம் அடையும்போது அதன் பண்புகள் மாறலாம். அதுபோல், அதன் உருமாறிய ரகமான ஒமைக்ரானும் வேகமாக பரவினாலும், லேசான பாதிப்பு கொண்டது கிடையாது. இப்போது வேண்டுமானால் வலிமை குறைந்தது போன்று தெரியும். ஆனால், இப்படியே இருக்கும் என்று கூற முடியாது. இது நுரையீரல் செல்களை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
ஒமைக்ரான் பரவலால் மேலும் சில புதிய வகை கொரோனா தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய வகை இன்னும் தீவிர தன்மை கொண்டதாக இருக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இருப்பினும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்” என அவர் கூறியுள்ளார்.