அரசியலில் இருந்து விலகினார் மெட்ரோ மேன்.. பாஜகவுக்கு ஏமாற்றம் !
அரசியலில் இருந்து விலகினார் மெட்ரோ மேன்.. பாஜகவுக்கு ஏமாற்றம் !
அரசியலில் இருந்து விலகுவதாக இந்தியா மெட்ரோ மேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோவின் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் ஜெய்ப்பூர், லக்னோ, கொச்சி ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களில் மூத்த பொறியாளராகவும் பணியாற்றியவர். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த நிலையில், கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்தார். மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜகவில் இணையும் நிகழ்வு அமித் ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. பின்னர் கேரளாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷபி பரம்பிலிடம் தோல்வியுற்றார்.
இந்நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், 90 வயதை நெருங்கிவிட்டேன். எனக்கு அரசியலில் ஆர்வம் போய்விட்டது. நான் தீவிர அரசியலில் இனி ஈடுபடப்போவதில்லை. அதற்கான காலம் கடந்துவிட்டது. நான் அரசியலைக் கைவிடக் காரணம் எனக்கு அதில் விருப்பமில்லை என்பது மட்டுமே. நான் எப்போதுமே அரசியல்வாதியாக இருந்ததில்லை. ஒரு ஆட்சிப்பணியாளராகவே அரசியலில் இணைந்தேன்.
மக்கள் சேவைக்காக அரசியலைக் கடந்து மூன்று தொண்டு நிறுவனங்களை நான் நடத்துகிறேன். முதன்முறையாக நான் தோற்றபோது வருத்தமாக இருந்தது. ஆனால், வெற்றிப் பெற்றிருந்தாலும் பயன் இருந்திருக்கப் போவதில்லை. மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல், ஒரு கட்சியின் ஒற்றை எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன செய்துவிட முடியும் என்றார்.
newstm.in