அமைச்சர்கள் மாமூல் கேட்கின்றனர்.. முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!
அமைச்சர்கள் மாமூல் கேட்கின்றனர்.. முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!
“முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, மாநில அரசுகளை கையேந்த வைத்துள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி என, 7 சதவீதம் வசூலிக்கின்றனர். நம் நாட்டில் 3, 5, 12, 18, 32 மற்றும் 54 சதவீதம் என 6 வகை வரி போட்டு சுமையைக் கூட்டுகின்றனர்.
முதல்வர் ரங்கசாமி பதவியேற்றபின் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசிடம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவித்த நிவாரணங்களை இன்னும் வழங்கவில்லை.
விலைவாசி உயர்வு குறித்தும் கவலை இல்லை. அரசு, கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை போடுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. அமைச்சர்கள், தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமூல் கேட்பது, வேண்டியவர்களுக்கு லேபர் காண்டிராக்ட் கேட்பது வாடிக்கையாகிவிட்டது.
கரசூர் தொழில் அதிபர்கள், இதுதொடர்பாக என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாமூல் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்போது அது தாராளமாக நடக்கிறது” என கூறியுள்ளார்.