விலையுயர்ந்த செல்போனால் கொலைகாரனான 16 வயது சிறுவன்!

தாய் வாங்கித்தந்த செல்போன்.. பறித்துச் சென்றதால் நண்பனை கொன்ற சிறுவன்

Update: 2020-01-29 12:50 GMT

வெளிநாட்டில் வேலை பார்த்த தாய் வாங்கிக் கொடுத்த, செல்போனை பிடுங்கிக் கொண்ட நண்பனை 16 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பாலக்கரை அடுத்த மரக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான முகம்மது இசாக் என்பது தெரியவந்துள்ளது.

கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பொது கழிவறையிலிருந்து வெளியேறி இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், இசாக்கின் நண்பரான சிறுவன் நாகூர் அனிபாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, இசாக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளான்.

சிறுவன் நாகூர் அனிபாவின் தாயார், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது, மகனுக்காக விலையுயர்ந்த செல்போன் ஒன்றையும் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த செல்போனை, இசாக் அடித்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நாகூர் அனிபா, இசாக்கை மது அருந்த அழைத்துச் சென்று, கழிவறையில் வைத்து, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

newstm.in

Tags:    

Similar News