வாகன ஓட்டுநர்களே கவனம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

வாகன ஓட்டுநர்களே கவனம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

Update: 2021-12-23 19:10 GMT

தமிழகத்தில் தினந்தோறும் வாகன விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது ஆகும். ஆகவே, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி, திருவாரூர் மாவட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாக வாகனங்கள் செல்வதை சோதனை செய்தனர். இது தொடர்பாக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது:

“திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில், கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை கட்டுப்படுத்த எஸ்பி உத்தரவின்படி எந்தெந்த சாலைகளில் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளனர்.

அதன்படி, பள்ளிகள் உள்ள பகுதியில் 20 கிலோ மீட்டர், மருத்துவமனை உள்ள பகுதியில் 30 கிலோ மீட்டர், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பிரதான சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். இதை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேக கட்டுப்பாட்டு கருவி மூலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே வேக கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Similar News