சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தி நியமனம் !!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல் சாந்தி நியமனம் !!
சபரிமலை புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடக்கும். அக்., 21 வரை பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வான 9 பேரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி, சபரிமலை புதிய மேல் சாந்தியாக என்.பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல் சாந்தியாக சம்பு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 1 ஆண்டு காலத்திற்கு சபரிமலையில் தங்கி பூஜைகளை மேற்கொள்வர்.
இதற்கிடையில், கேரளாவில் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் நாளையும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
newstm.in