உ.பி.யில் அடுத்தாண்டு தேர்தல்.. தொகுதிக்கே வராத பாஜக எம்எல்ஏவுக்கு நடந்த விபரீதம் ! பரவும் வீடியோ !!

உ.பி.யில் அடுத்தாண்டு தேர்தல்.. தொகுதிக்கே வராத பாஜக எம்எல்ஏவுக்கு நடந்த விபரீதம் ! பரவும் வீடியோ !!

Update: 2021-07-31 11:55 GMT

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டனர். 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதிப் பக்கமே செல்லாத எம்.எல்.ஏக்களும் தங்களின் தொகுதிப் பக்கம் தற்போது செல்லத்துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான கமல் மாலிக் தொகுதியில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் எம்எல்ஏ கமல் மாலிக் ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் வழியாக பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை சூழ்ந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் பகுதியில் தேங்கியிருக்கும் முட்டியளவு கழிவுநீரின் நிலை குறித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறி எம்.எல்.ஏ கமல் மாலிக்கை நடக்க கழிவு நீரில் இழுத்துச்சென்று நடக்க வைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கிராமத்து தலைவரின் கணவரான ரவீந்திர குமார் என்பவர், எம்.எல்.ஏ கமல் மாலிக்குடன் சென்று முட்டி அளவு கழிவு நீர் குறித்த நிலையை எம்.எல்.ஏவுக்கு சுட்டிக்காட்டுகிறார். மேலும், எம்.எல்.ஏ இங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


இது குறித்து எம்எல்ஏ கமல் மாலிக் கூறுகையில், கிராம மக்களின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே நான் அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன். அந்த வீடியோவை தவறான பார்வையில் எடுத்து தவறாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த பகுதியினை சீரமைக்கும் வகையில் இந்த விஷயத்தை உள்ளூர் நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன் என தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News