நித்தியானந்தாவின் முக்கிய சீடர் காரில் கடத்தி கொலை.. நிர்வாண நிலையில் கிடந்த சடலம்
நித்தியானந்தாவின் முக்கிய சீடர் காரில் கடத்தி கொலை.. நிர்வாண நிலையில் கிடந்த சடலம்
நித்தியானந்தாவின் சீடர் காரில் கடத்தி முகத்தை பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார். புதுச்சேரி அருகே வில்லியனூர் அடுத்த ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (51). இவர் நித்தியானந்தாவுக்கு புதுச்சேரியில் உள்ள முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார். நித்தியானந்தா பெயரில் 2 பேக்கரி நடத்தி வந்தார். ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காரில் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி, உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே நேற்று மாலை, குருவிநத்தம் சமூக நலக்கூடம் எதிரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வஜ்ரவேலின் கார் நின்றுகொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது காரில் நிர்வாண கோலத்தில் கொலை செய்யப்பட்டு வஜ்ரவேல் சடலமாக கிடந்தார். அவரது தலையில் பிளாஸ்டிக் கவர் இருந்தது. இதனால் பிளாஸ்டிக் கவர் மூலம் முகத்தை மூடி, மூச்சு திணற வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர், வஜ்ரவேலின் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர் காணாமல் போவதற்கு முன்பு வில்லியனூர் அடுத்த செம்பியம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வசந்தாவிடம் 2 லட்சம் ரூபாயை கடன் தொகையை திருப்பி வாங்கிக்கொண்டு காரில் திரும்பியுள்ளார். இதனால் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in