ஒரே அலுவலகத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான்.. மற்றவர்களை தேடும் பணி தீவிரம்..!
ஒரே அலுவலகத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான்.. மற்றவர்களை தேடும் பணி தீவிரம்..!
உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சுமார் 40 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று (14ம் தேதி) மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வசை-விரர் பகுதியைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 3ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பிய நபர், தனது அலுவலகத்திற்குச் சென்று சக பணியாளர்களை சந்தித்ததாகவும், அவரிடமிருந்து மற்றவர்களுக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் இருந்து திரும்பிய நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.