ஓய்வூதியர்களே சூதானமா இருங்க.. கொஞ்சம் அசந்தா மொத்த பணமும் அபேஸ்..!
ஓய்வூதியர்களே சூதானமா இருங்க.. கொஞ்சம் அசந்தா மொத்த பணமும் அபேஸ்..!
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதன்மூலம் நடக்கும் குற்றச் செயல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவற்றில் ஒன்றாக, இணையம் மூலம் ஒருவரின் வங்கிக் கணக்கை கைப்பற்றி, அதில் உள்ள பணத்தை திருடும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இத்தகைய கும்பல்கள், அதிகம் படிப்பறிவு இல்லாத முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களை குறி வைத்து பணம் திருடுவது தொடர்ந்து நடக்கிறது. அந்தவகையில், கோவை சைபர் கிரைம் போலீசில் மட்டும் ஓய்வூதியம் பெறும் முதியோரை ஏமாற்றி ஓ.டி.பி. எண் பெற்று, பணம் திருடியதாக 41 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இத்தகைய வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருவதையடுத்து, குடும்ப ஓய்வூதியம் பெறும் முதியோர் அனைவருக்கும் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்ப சைபர் கிரைம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக, மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைவரின் செல்போன் எண்களை சேகரித்துள்ளனர். மோசடியில் சிக்காமல் தப்பிக்க செய்ய வேண்டியது என்ன, ஒருவேளை சிக்கி விட்டால் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி விளக்கும் குறுஞ்செய்திகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த மோசடி குறித்து கோவை மாவட்ட கருவூல அதிகாரி தேவராஜ் கூறியதாவது: “கோவை மாவட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 36,483 பேர். கோவை மாவட்ட கருவூலத்தில் மட்டுமே 27,000 பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களது அறியாமையை பயன்படுத்தி பண மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
‘உடனடியாக பான் கார்டு அப்டேட் செய்யாவிட்டால், உங்கள் வங்கி கணக்கு செயல் இழந்து விடும்' என்று கூறி போனுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் இருக்கும் 'லிங்க்கை' கிளிக் செய்தால், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் மோசடி ஆசாமிகள் திருடி விடுவர்.
அதே போல, வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்றியும், ஓ.டி.பி. உள்ளிட்ட விவரங்களை வாங்கி அக்கவுன்டை கைப்பற்றி, மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். இத்தகைய மோசடியில் அதிகம் பாதிக்கப்படுவது ஓய்வூதியர்கள்தான்.
இதை தவிர்க்க, போனில் யார் பேசி வங்கிக் கணக்கு பற்றி விவரம் கேட்டாலும், எந்த தகவலும் தெரிவிக்க கூடாது. போனுக்கு வரும் இணைய லிங்க்கை 'கிளிக்' செய்யக்கூடாது. 'நமது தகவல் தானே அப்டேட் செய்கிறோம்' என்று அசட்டையாக, போனில் அப்டேட் செய்யக்கூடாது.
என்ன சந்தேகம் இருந்தாலும், கருவூலத்துக்கோ, வங்கிக்கோ நேரில் சென்று அலுவலர்களை சந்தித்துப் பேசலாம். கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு ஓய்வூதியர்கள் யாரும் வாழ்நாள் சான்று தருவதற்காக கருவூலம் வரத் தேவையில்லை. அடுத்த ஆண்டு ஜூன் வரை அவகாசம் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஓய்வூதியர்கள் இறந்து விட்டால், உடனடியாக அந்த விவரத்தை அரசுக்கும், கருவூலத்துக்கும் தெரிவித்து ஓய்வூதியத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், மாதாமாதம் வரும் ஓய்வூதியத்தை இழக்க விரும்பாத உறவினர்கள் சிலர், 'வரும் வரை வரட்டும்' என்று எண்ணி, கருவூலத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
கொரோனா காரணமாக வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க நேரில் வர தேவையில்லை என்ற உத்தரவும் இத்தகைய நபர்களுக்கு சாதகமாகி விட்டது.இதை கண்டறிய, கடந்த இரண்டு ஆண்டுகளில் இறந்தவர்கள் விவரத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பெறுவதற்கு, கருவூல நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
'ஓய்வூதியர் இறந்தபிறகும் ஓய்வூதியத்தை பெறுவது, சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, அந்த தொகையை வசூலிக்க, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, முறைப்படி தகவல் தெரிவிக்க உறவினர்கள் முன் வரவேண்டும்' என்று எச்சரிக்கின்றனர் கருவூல அதிகாரிகள்.