சுற்றுலா தலங்களில் மாஸ்க் இல்லாமல் சுற்றும் மக்கள்.. பிரதமர் மோடி கவலை !

சுற்றுலா தலங்களில் மாஸ்க் இல்லாமல் சுற்றும் மக்கள்.. பிரதமர் மோடி கவலை !

Update: 2021-07-13 17:35 GMT

இந்தியாவில் கொரோனா முதல் அலையைவிட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா 2ஆவது அலை. உயிரிழப்புகள், பொருளாதாரம், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் சீண்டிப்பார்த்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் தற்போது சற்றுத் தணிந்துவருகிறது. இதனால் பல்வேறு மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

தளர்வுகள் அடிப்படையில் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் மக்கள் சுற்றுலா தலங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். மேலும் சந்தை போன்ற பொது இடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுகின்றனர்.

எனினும் அங்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிவேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் இங்கு கூடும் பெரும்பான்மையான மக்கள் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரியும் காணொலிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வட்டமடித்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் அது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சுற்றுலா துறை, வர்த்தகம் உள்ளிட்டவை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது உண்மை தான். அதே நேரத்தில் இதைக் காரணம் காட்டி மலைப் பிரதேசங்களிலும், சுற்றுலா தலங்களிலும், மார்க்கெட்டுகளிலும் முகக் கவசம் இல்லாமல் மக்கள் கூடுவதை ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கொரோனா வைரஸ் என்பது தானாக வந்தும் போயும் விடுவதில்லை. நாம் அலட்சியத்துடன் நடந்து கொண்டால் மீண்டும் பரவத் தொடங்கிவிடும். 3 வது அலையைத் தடுத்தாக வேண்டும். முகக் கவசம் இல்லாமல் பொது இடங்களில் மக்கள் கூடுவதை நாம் தடுத்தாக வேண்டும் என்று அவர் எச்சரித்து உள்ளார்.


newstm.in

Tags:    

Similar News