பரிதாபம்.. டூ வீலர் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவி, மாணவர் பலி..!

பரிதாபம்.. டூ வீலர் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவி, மாணவர் பலி..!

Update: 2021-12-24 15:32 GMT

பெங்களூரு சாரக்கி பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா (21). அதே பகுதியில் வசித்து வந்தவர் கவுசிக் (22). இவர்கள் 2 பேரும் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்கள். நேற்று முன்தினம் வழக்கம் போல் 2 பேரும் கல்லூரிக்கு சென்றிருந்தனர். மாலையில், கவுசிக்கும் சுஷ்மாவும் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.

ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் வந்து கொண்டு இருந்தனர். பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பநாயக்கஹள்ளி மெயின் ரோட்டில் 2 பேரும் வந்து கொண்டிருந்தபோது, அதே சாலையில் மற்றொரு லாரி வந்தது. இந்த நிலையில், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கவுசிக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

லாரி மோதிய வேகத்தில் கவுசிக்கும், சுஷ்மாவும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்து 2 பேரும் உயிருக்கு போராடினார்கள். உடனே அங்கிருந்தவர்கள் கவுசிக், சுஷ்மாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பன்னரகட்டா போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, லாரி டிரைவரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று தெரிந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதும், லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Similar News