மதத்தின் பெயரில் பகைமை பரப்பினால்.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!

மதத்தின் பெயரில் பகைமை பரப்பினால்.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை..!

Update: 2022-01-28 16:05 GMT

“மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ, அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் இன்று (28ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


அதில், “பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் என்பவர் தன்னுடைய ட்விட்டரில் பொய்யான, மக்களிடையே வதந்தியை பரப்பும் தகவலை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் பாஜக மாநில இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வழக்கானது புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ, அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது  கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News