தமிழக அரசின் பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முடிவு..?
தமிழக அரசின் பொங்கல் பரிசு.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க முடிவு..?
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால், சிறப்புத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அறிவிப்பு வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.