பெண் பத்திரிகையாளருக்கு ஆபாச மெசேஜ்: சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி !
பெண் பத்திரிகையாளருக்கு ஆபாச மெசேஜ்: சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி !
கேரள மாநில கப்பல் மற்றும் உள்நாட்டு வழிசெலுத்தல் கழக (Kerala Shipping and Inland Navigation Corporation) நிர்வாக இயக்குநராக பிரசாந்த் ஐ.ஏ.எஸ் இருந்துள்ளார். கடந்த முறை சிபிஎம் ஆட்சியின்போது கேரள கடல் பகுதியில் வெளிநாட்டு கார்பரேட் கப்பல் நிறுவனங்களுக்கு மீன்பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்கு அதிகாரமுள்ள அதிகாரியான பிரசாந்த், அரசிடம் கருத்துக் கேட்காமல் அனுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த செய்திக்காக எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், செல்போன் அழைப்புகளை அவர் ஏற்காததால், வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி கருத்துக் கேட்டுள்ளார். ஆனால் அவர் அனுப்பி பதிலை கண்டு பெண் பத்திரிகையாளர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது தனது தரப்பு கருத்து தெரிவிப்பதற்கு மாறாக ஆபாச மெசேஜ் மற்றும் ஸ்டிக்கர்களை பிரசாந்த அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து தனது அலுவலகத்துக்கும், எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கத்திற்கும் அப்பெண் பத்திரிகையாளர் தகவல் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முதல்வர் பினராயி விஜயனுக்குப் புகார் அனுப்பப்பட்டது. மெசேஜ் குறித்த ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. ஆனால், அந்த மெசேஜை அதிகாரி அனுப்பவில்லை நான் தான் அனுப்பினேன் என்று அவரது மனைவி தெரிவித்தார்.
இந்த நிலையில் பெண் செய்தியாளரின் புகார் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த் குற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறி எர்ணாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த் பெண்மையைக் கொச்சைப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in