சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த்..! எதற்காக தெரியுமா..?

சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த்..! எதற்காக தெரியுமா..?

Update: 2021-07-05 13:46 GMT

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனால், பெட்ரோல் - டீசல் விலையை மத்திய - மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார்.

போராட்டத்தின் கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், போராட்ட பகுதிக்கு பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டார். அவருடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சைக்கிளில் அணிவகுப்பாகச் சென்றனர்.

பேசிய அவர், “தொடர் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு, கட்டுமானப் பொருட்கள், மருந்து பொருட்கள் என அனைத்து விலை உயர்ந்து உள்ளது. அதேபோல், தமிழகத்தில் அறிவிக்கப்படாத  மின்வெட்டு என மக்கள் இந்த பேரிடர் காலத்தில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க வேண்டியது மத்திய - மாநில அரசின் கடமை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். சிலிண்டர் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும்..? மத்திய - மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

உலகத்திலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகம் உள்ள நாடு இந்தியாதான். மக்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், அரசுக்கு வரி வந்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 44 ரூபாய்க்கும், டீசல் 42 ரூபாய்க்கு விற்க முடியும்.

அரசு லாபம் பெற வேண்டும் என வரியை மக்கள் மீது சுமத்தக் கூடாது. ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டத்தை தமிழகத்தில் தேமுதிக அனுமதிக்காது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
Tags:    

Similar News