ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி.. மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !
ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி.. மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது நாளாக இன்றும் இரு அவைகளும் முடங்கியது. பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். சபை கூடியதும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில் பிற்பகல் 1 மணிக்கு கொரோனா தொடர்பான விவாதம் நடைபெற்றது. காகிதங்களை கிழித்தெறிந்து பதாகைகளை ஏந்தியும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மூன்றாவது முறையாக மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசும் போது கூறியதாவது;-
டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்.
பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுகுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற்கான பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை பலிகடா ஆக்கிவிட்டார் என கூறினார். ஹர்ஷவர்தன் பெயரை குறிப்பிடாமல் அவரை சுட்டிக்காட்டி பேசினார்.
சமீபத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார் ஹர்ஷவர்தன். இதன்பிறகு மன்சுக் மாண்டவியா புதிய சுகாதாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in