பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் ரத்தாகிறது.. எல்லாம் இந்த கொரோனா தான் !!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் ரத்தாகிறது.. எல்லாம் இந்த கொரோனா தான் !!
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை மிகவும் உக்கிரமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஒரே நாளில் 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் காரணமாக அமெரிக்கர்கள் இந்தியா செல்லவேண்டாம் என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ், போர்ச்சுகல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன்படி மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இருதரப்பு பயணத்தையும் அவர் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக மே 8-ஆம் தேதி நடைபெறவிருந்த 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி போர்ச்சுக்கலுக்கு செல்ல இருந்தார், அதைத் தொடர்ந்து அவர் பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல இருந்தார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இப்போது காணொலி காட்சியின் வாயிலாக நடக்கும் என கூறப்படுகிறது
இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நிறுத்தி வைத்திருந்தார். ஏப்ரல் 25ஆம் தேதி ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தருவதாக இருந்தார். முன்னதாக அவர் ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனாவின் தீவிரம் காரணமாக அவரது இந்திய பயணத் திட்டம் இரு முறையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
newstm.in