போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி..! அதிரும் பார் கவுன்சில், காவல்துறை

ஆயிரக்கணக்கான போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி..! அதிரும் பார் கவுன்சில், காவல்துறை

Update: 2020-01-26 17:03 GMT

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான போலி வழக்கறிஞர்களை உருவாக்கிய ஆந்திர தனியார் சட்டக்கல்லூரி முதல்வரை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் சார்பில் அதன் செயலாளர் ராஜாகுமார் என்பவர் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு வீரராக பணியாற்றிய விபின் என்பவர் பணியில் இருக்கும்போதே ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள எஸ்.பி.டி.ஆர்.எம். என்ற தனியார் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு படித்ததாக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், போலி சான்று அளித்ததை கண்டறிந்த பார் கவுன்சில் நிர்வாகிகள், அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, போலி சான்று வழங்கிய ஆந்திர தனியார் சட்டக்கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், வழக்கறிஞர்கள் உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டு, ஆந்திர தனியார் சட்டக் கல்லூரியில் விபின் சான்றிதழ் பெற உதவியது தெரியவந்தது.

இதையடுத்து இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. தமிழகம் மற்றும் புதுவையில் 100க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மூலம் ஆந்திராவில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு போலி சான்றிதழ் அளித்துள்ளது தெரியவந்தது. இதற்காக சட்டக் கல்லூரி முதல்வரான ஹிமவந்த் குமார், சுமார் 6 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News