தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. மன்னிப்பு கோரினார் ரிசர்வ் வங்கி இயக்குநர்..!
தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. மன்னிப்பு கோரினார் ரிசர்வ் வங்கி இயக்குநர்..!
ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி இயக்குநர் சாமி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று சந்தித்து பேசினார்.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
அப்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் மற்றும் பிராந்திய இயக்குநர் சாமி, இன்று தலைமைச் செயலகம் வந்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக மன்னிப்பு கோரினார்.
இது தொடர்பாக, தமிழக நிதித்துறை செயலர் முருகானந்தத்தையும் சந்தித்து பேசினார். இதன்மூலம், தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இன்று மாலை ரிசர்வ் வங்கி சார்பில் விரிவான அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.