தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி..!
தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி..!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி கல்லூரிகளும், நவ.1-ம் தேதி பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.
இந்நிலையில், கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் தொற்று அதிகமாக பரவியதாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் காரணமாகவும் டிச. 24-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், சமீப நாட்களாக தொற்று பரவல் குறைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ப்ரீகேஜி - எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மற்றும் பிளே ஸ்கூல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை எழுத உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்குகின்றன.