அலறும் பிரிட்டன்.. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. என்ன செய்யப்போகிறது?
அலறும் பிரிட்டன்.. ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. என்ன செய்யப்போகிறது?
பிரிட்டனில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இதில் சீனாவில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தொற்று பரவல் தலைவிரித்து ஆடியது. நாள்தோறும் லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உறுதியானது. அதன்பின்னர் ஒருவழியாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மக்கள் ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரிசோதனை பிரிட்டனில் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 122 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பல்வேறு நகரங்களில், பலர் விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்றுவருவதால், பல தொழிற்சாலைகள், அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 7 நாளாக பிரிட்டன் அரசு குறைத்துள்ளது. அதே நேரம் கிறிஸ்துமஸ் வரை புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
ஒமைக்ரான் பரவலின் வேகம் மற்றும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவோரின் எண்ணிக்கை உயரும் போன்ற தகவல்கள் உறுதி செய்யப்படாததால் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு இல்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. எனினும் நிலைமை மோசமடைந்தால், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
newstm.in