ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிறையில் அடைப்பு..!

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிறையில் அடைப்பு..!

Update: 2021-12-13 18:00 GMT

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறாக வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனிடையே சிலர், பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இந்த விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்திருந்தது. தமிழக காவல்துறையும், விபத்து குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த தெற்குதுறை வயல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், குன்னூர் விமான விபத்து குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார். கடந்த சட்டப் பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால், வீடியோ வேகமாக பகிரப்பட்டது.

இதனிடையே, அந்த வீடியோவில் தவறாக பேசியுள்ளதாக புதுக்கோட்டை பாஜக நிர்வாகி ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீரனூர் போலீசார்​, பாலசுப்பிரமணியனை 5 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். அவர்,15 நாள் நீதிமன்ற காவலில், கீரனூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News