உயிருக்கு போராடிய மகன்.. தண்ணீர் தொட்டியில் சடலமாக மகள்.. அதிர்ச்சியில் தாய்.. தப்பியோடிய தந்தை

உயிருக்கு போராடிய மகன்.. தண்ணீர் தொட்டியில் சடலமாக மகள்.. அதிர்ச்சியில் தாய்.. தப்பியோடிய தந்தை

Update: 2020-02-13 12:56 GMT


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில் - அம்பிகா தம்பதியினர். இவர்கள் சுந்தர் என்ற 7 வயது மகன் மற்றும் சஞ்சனா என்ற 4 வயது மகளுடன் அதே பகுதியில் வசித்துவந்தனர். செந்தில், மயிலாடி பகுதியில் கேன் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். உறவினர் வீட்டு திருமணவிழாவிற்கு செல்லவேண்டும் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்பிகா வெளியில் சென்றிருந்த நேரத்தில் குழந்தைகள் இருவரும் வீட்டினுள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

மீண்டும் அம்பிகா வீட்டிற்கு சென்று பார்த்த போது 7 வயது மகன் சுந்தர் விளையாடிக் கொண்டிருந்த ஸ்கிப்பிங் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்த அம்பிகா, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதே நேரத்தில் மகளைக் காணவில்லை. சிறுமி சஞ்சனா, வீட்டினுள் இருந்த தண்ணீர் தொட்டியினுள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு தந்தை செந்தில் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தந்தை செந்தில், மகன் சுந்தருடன் வீட்டிற்குள் போவதும் சிறிது நேரம் கழித்து அவர் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வருவதும் பதிவாகியுள்ளது.

செந்தில் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகளை கொலை செய்தாரா? அல்லது விபத்தா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எனினும் செந்திலை பிடித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் எனவும் போலீசார் கருதி அவரை தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News