இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடை போடுங்க : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடை போடுங்க : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
“இலங்கையில், போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்” என, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயாவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள் ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது. பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அதுதான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது.
ஆனால், இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.